மியான்மருக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விசேட தூதுக்குழுவினர் அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியை சந்திக்க அனுமதிக்க முடியாது என இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேட தூதுக்குழுவினர் நாட்டுக்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எனினும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஆங் சான் சூகியை அவர்கள் சந்திக்க அனுமதிக்க முடியாது என மியான்மார் இராணுவ ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அத்துடன், இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஐ.நாவுக்கான மியான்மர் தூதுவரை அங்கீகரிக்காது தாமதிப்பதற்கான காரணம் அரசியல் உள்நோக்கமே எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து கடந்த பெப்ரவரி 1 இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்துடன், ஆங் சான் சூகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இராணுவ ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.